சிகிக்சைக்கு காசில்லாமல் இறந்தாரா வடிவேல் பாலாஜி…? ‘ஷாக்’ தகவல்
சென்னை: மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாத காரணத்தால் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உயிரிழந்துள்ள திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடிவேல் பாலாஜி… சின்னத்திரையில் அறிமுகமாகி வலம் வந்த அவர், இப்போது உயிருடன் இல்லை. அவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சேத்துபட்டில் வசித்து வந்த அவருக்கு 15 நாட்கள் முன்பு மாரடைப்பு ஏற்பட்டது.
அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2 நாள் சிகிச்சைக்கு பின், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 2 வாரங்கள் சிகிச்சையில் இருந்தார். பலனில்லாததால் ராஜூவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இங்கு வந்த பின்னர் தான் அவரது உடலில் உள்ள சிக்கல்கள் மருத்துவர்கள் மூலமாக வெளி வந்திருக்கின்றன. பணம் இல்லாததால் நல்ல மருத்துவமனையில் சேர்க்க முடியவில்லை, ஒரு கட்டத்தில் பணம் இல்லாததை அறிந்த தனியார் மருத்துவமனை வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை தர மறுத்ததாகவும் உடனிருந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதனால் தான் உடல் உறுப்புகள் கடும் சிக்கலாகி உள்ளதாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். உலகையே சிரிக்க வைத்த ஒரு நகைச்சுவை நாயகனின் மரணம்… மிகுந்த சோகத்தையும், படிப்பினையை கொடுத்துள்ளது.