மகள் சடலத்தை சுடுகாட்டுக்கு தனியாக தோளில் சுமந்து சென்ற தந்தை…!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உடல்நலம் குன்றி பலியான மகளை தமது தோளில் சுமந்து சென்று தந்தை ஒருவர் தனியாளாக அடக்கம் செய்துள்ளார்.
கொரோனாவின் தொற்று பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையை சிதற அடித்துள்ளது. மரணத்துக்கு பின்னர் கொரோனாவின் கொடுமை அதை விட வேதனை தருவதாக உள்ளது.
பஞ்சாபில் உடல்நலக்குறைவால் இறந்து போன மகளை தனியாளாக தோளில் சுமந்து சென்று தந்தை ஒருவர் அடக்கம் செய்துள்ளார். ஜலந்தரில் உள்ள திலீப் என்பவரின் 11 வயது உடல்நலம் பாதிக்கப்பட, அவரது தந்தை மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளார்.
பின்னர் உயர் சிகிச்சைக்காக அமிர்தசரசில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பலியாக, ஆம்புலன்ஸ் மூலம் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சி யாரும் இறுதிச்சடங்குக்கு வரவில்லையாம். மனம் வெதும்பிய தந்தை தனி ஒருவனாக தமது மகளை தோளில் சுமந்தவாறே சுடுகாடு வரை சென்று இறுதிச்சடங்கு செய்திருக்கிறார். கொரோனாவால் மகள் இறக்கவில்லை என்றாலும் பீதியால் ஊர் மக்கள் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.