தெற்கு திட்டை விவகாரத்தில் பாய்ந்தது வன்கொடுமை சட்டம்…! ஊராட்சி செயலாளர் கைது
கடலூர்: தலித் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த சம்பவத்தில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்..
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது தெற்கு திட்டை. இந்த ஊராட்சியின் தலைவர் ராஜேஸ்வரி ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். அதே ஊராட்சியில் துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்.
இந் நிலையில் ஜூலை 17ந் தேதி நடைபெற்ற ஊராட்சிமன்ற கூட்டத்தில் ஊராட்சி தலைவர், ஊராட்சி துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்.
ஆதிதிராவிடர் சமூகத்தினை சேர்ந்தவர் என்பதனால் அவமானப்படுத்தப்பட்டார் என்று புகார்கள் எழுந்தன. இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலானது.
தொடர்ந்து ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சிந்துஜாவை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். தற்போது சிந்துஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.