மனிதர்களை போல.. காலையில் காபி குடிக்கும் யானை..!! எந்த ஊரில் தெரியுமா?
தூத்துக்குடி: சாதாரண மனிதர்கள் போன்று காலையில் காபி குடிப்பதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறது கோயில் யானை.
தூத்துக்குடி மாவட்டத்தில் நவ திருப்பதி கோயில்களில் கடைசி தலம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் ஆகும். இந்த கோயிலில் ஆதிநாயகி என்ற பெயரில் யானை ஒன்று உள்ளது. கோயில் வளாகத்தில் பாகன் இந்த யானையை பராமரித்து வருகிறார்.
இதேபோன்று திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலுக்கு சொந்தமான குமுதவல்லி என்ற யானை, இரட்டை திருப்பதி அரவிந்த லோசனர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான லட்சுமி என்ற யானையும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் வளாகத்தில் பாகன்கள் பராமரித்து வருகின்றனர்.
அவர்களில் ஆதிநாயகி யானையை தினமும் காலையில் பாகன் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது வழக்கம். மற்ற 2 யானைகளும் நாள்தோறும் காலையில் பாகன்களுடன் நடைபயிற்சியாக அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வரும்.
நடைபயிற்சிக்கு பாகனுடன் செல்லும் ஆதிநாயகி யானை, கோயில் அருகில் உள்ள ரத வீதிகள், பஜார், மெயின் ரோடு வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து சேரும். நடைபயிற்சியின்போது மேல பஜாரில் உள்ள காபி கடையில் பாகன் காபி குடிப்பது வழக்கம்.
அப்போது நன்கு ஆற்றப்பட்டு சூடு குறைந்த காபியை வாங்கி யானைக்கும் கொடுத்து வந்திருக்கிறார் பாகன். அதனை யானை ஆர்வத்துடன் விரும்பி பருகுகிறது.
நாள்தோறும் காலை நேரத்தில் ஆதிநாயகி யானை அந்த கடையில் காபி குடிக்காமல் இருந்தது இல்லை. யானை ஒன்று தினமும் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.