கலைஞர் பிறந்த நாள்..! மக்களிடம் வசமாக வாங்கிக் ‘கட்டிக் கொண்ட’ திமுக எம்எல்ஏ…!
விருதுநகர்: தடுப்பூசி போட்டுக்க வாங்க என்று சொன்ன திமுக எம்எல்ஏவை பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டு திகைக்க வைத்துள்ளனர்.
ராஜபாளையம் எம்எல்ஏவாக இருப்பவர் தங்கபாண்டியன். திமுகவை சேர்ந்தவர். இவர் மக்களுக்கு அனுப்பிய ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் அவருக்கே வினையாக முடிந்து, சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமது தொகுதி மக்களுக்கு தங்கபாண்டியன் ஒரு வாட்ஸ் அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜூன் 3ம் தேதி, ராஜபாளையம் கிராம பகுதிகள் செட்டியார்பட்டி, சேத்தூர், முத்துசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்றும், எந்த திருமண மண்டபத்தில் போடப்படுகிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
எம்எல்ஏவே சொல்லிவிட்டார் என்று நம்பிக்கையுடன் மக்களும் காலை 7 மணி முதல் கால் கடுக்க காத்திருந்தனர். ஆனால் எம்எல்ஏ சொன்ன மையத்தில் வெறும் 200 பேருக்கு தடுப்பூசிகள் தான் இருப்பில் இருந்திருக்கின்றன. இதை அறிந்த பொதுமக்கள் ஆத்திரத்தில் இருக்க, தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க எம்எல்ஏ தங்கபாண்டியன் வந்திருக்கிறார்.
அவ்வளவு தான்… ஒட்டு மொத்த கோபமும் அவர் மீது திரும்ப, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திகைக்க வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் என்ன இப்படி ஆகிவிட்டதே என்று யோசித்த எம்எல்ஏ தங்கபாண்டியன் நழுவ ஆரம்பித்தார். அதை புரிந்து கொண்ட மக்கள் விடாமல் முற்றுகையிட வேறு வழியின்றி போலீசார் வந்து சமாதானப்படுத்த வேண்டிய அளவுக்கு நிலைமை சிக்கலானது. பின்னர் போலீசார் சொன்னதை கேட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.