ஊருக்கே சோறு…! சாப்பிட முடியாத பிரேமலதா
சென்னை: ஊருக்கு சோறு போட்டாரு.. ஆனா என்னால அவரு இல்லாம சாப்பிட முடியல என்று கண்ணீர் வடித்து வருகிறார் விஜயகாந்த் மனைவி பிரேமலதா.
உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த் காலமாகி 3 நாட்கள் ஆகின்றன. விஜயகாந்த் குடும்பத்தினர், அவரின் தொண்டர்கள், ஆதரவாளர்கள் என பலரும் இன்னமும் சோகத்தில் தத்தளித்து வருகின்றனர்.
இந் நிலையில் விஜயகாந்துக்கு மணி மண்டபம் அமைத்து தர வேண்டும் என்று அவரது மனைவி பிரேமலதா தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது;
கட்சியின் தலைமை கழகத்தில் அவருக்கு பெரிய சமாதி அமைக்க உள்ளோம். உங்கள் அனைவரையும் இறுதி மரியாதை செலுத்த வைக்க வேண்டும் என்று விரும்பினேன், ஆனால் இடவசதி காரணமாக அது முடியாமல் போய்விட்டது.
இப்போது அனைவரும் அவர் நினைவிடம் வந்து செல்லலாம், அஞ்சலி செலுத்தலாம். பொது இடத்தில் விஜயகாந்துக்கு மணி மண்டபம் அமைத்து தர தமிழக அரசு முன் வர வேண்டும்.
அவர் ஊருக்கே சோறு போட்டார், ஆனால் இன்று அவர் இல்லாமல் எங்களால் எதுவும் சாப்பிட முடியவில்லை. ஒவ்வொரு சோத்து பருக்கையிலும் எங்களுக்கு அவர் தெரிகிறார். நிறைய கடமைகள் எங்களுக்கு இருக்கின்றன, அவை அனைத்தையும் விரைவில் செய்து முடிப்போம் என்று கூறி உள்ளார்.