Sunday, May 04 12:38 pm

Breaking News

Trending News :

no image

துரோகி மகேந்திரன்… பொங்கி எழுந்த கமல்…! வெடித்தது உட்கட்சி பூசல்…!


சென்னை: மகேந்திரன் ஒரு துரோகி, களையெடுக்கப்பட வேண்டியவர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன், பொன் ராஜ், சந்தோஷ் பாபு உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்பதால் விலகுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மகேந்திரன் ஒரு துரோகி என்றும், களையெடுக்கப்பட வேண்டியவர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தமது அறிக்கையில் கூறி இருப்பதாவது:  சீரமைப்பும் தமிழகத்தை எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்றத் தேர்தலை சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். துரோகிகள் களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர்.ஆர்.மகேந்திரன்.

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப் போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களை எடுத்துக் கொள்ளத் துணிந்தார். கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை.

நேர்மை இல்லாதவர்களும், திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமை இன்மையையும், நேர்மை இன்மையையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழிபோட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.

தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார். ஒரு களையே தன்னைக் களை என்று புரிந்து கொண்டு தனக்குத் தானே நீக்கி கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை.

நான் செய்த தவறுகளை மறைக்கவோ மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை. என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை. தோல்வியின் போது கூடாரத்தைப் பிடித்துக் கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Most Popular