இனிமே இந்த குரலை கேட்க முடியாது…! தடை போட சொன்ன தலைமை செயலாளர்
சென்னை: தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது என கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம் விவரம் வருமாறு: மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.
அறிவியல் வளர்ந்துவிட்டது; தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டிய தேவையில்லை; ஒலிப்பெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்.
எனவே, தண்டோரா போடக் கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.