ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டி…? ஜிகே வாசனின் சூப்பர் டுவிஸ்ட்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார்.
யாரும் எதிர்பாராத வகையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்க உள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் யார் வேட்பாளர் என்ற கேள்வியும் எழுந்தது.
தேர்த்லில் பாஜக தனித்து போட்டியிடலாம், அதிமுக வேட்பாளரை அறிவிக்கும், தமாகாவுக்கு வாய்ப்பு என்று ஹேஸ்யங்கள் எழுந்த வண்ணம் இருந்தது. தமது கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அதிமுகவிடம் தமாகா தலைவர் ஜிகே வாசன் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந் நிலையில் அவர் வெளியிட்டு ஒரு முக்கிய அறிக்கை அக்கட்சி தொண்டர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது என்று அவர் கூறி உள்ளளார்.
இது குறித்து ஜிகே வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கை விவரம் வருமாறு:
கடந்த 2021 சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்துக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தொகுதியில் தமாகா வேட்பாளராக யுவராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கிறார்கள்.
திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளை மீறி எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கடின உழைப்பால் வாக்காளர்கள் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகளைப் பெற்றோம். தொடர்ந்து தொகுதியில் கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம்.
தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள். அப்போது இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் தமாகாவின் மூத்த தலைவர்களுடனும் நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன். மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மை கட்சியான அதிமுகவின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை தமாகா ஏற்றுக் கொண்டது. தமிழக மக்கள் நலன், கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட தமாகாவின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப் பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும் கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை தமாகா சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஜி.கே வாசன் கூறியுள்ளார்.