தமிழகம் முழுவதும் போகி பண்டிகை உற்சாகம்…! அதிகாலையில் கொண்டாடிய மக்கள்
சென்னை: போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பழைய பொருட்களை ரோட்டில் போட்டு எரித்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படுவது போகி. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப போகி கொண்டாடப்படுகிறது.
இன்று அதிகாலையில் போகி பண்டிகையையொட்டி வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எடுத்து எரிக்க தொடங்கினர். அதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலையில் இருந்தே புகை மூட்டம் எழத்தொடங்கியது.
பனி மூட்டத்துடன் புகை மூட்டமும் சேர சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகள் காட்சி அளித்தன. இதனால் காலையில் அலுவலக பணி மற்றும் இதர பணிகளுக்காக வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் விளக்குகளை எரிய விட்ட படியே சாலைகளில் சென்றனர். சென்னை போன்று மற்ற பகுதிகளிலும் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.