Sunday, May 04 12:42 pm

Breaking News

Trending News :

no image

அண்ணாமலை முந்திரிக்கொட்டை…! தாளித்து எடுத்த மா. கம்யூ.


சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முந்திரிக்கொட்டை போல முந்திக் கொண்டு பேசுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

ஆளுநர், ரஜினிகாந்த் சந்திப்பு பற்றி இன்னமும் அரசியல் கட்சிகள் விவாதம் நடத்தி வருகின்றன. எதற்கு சந்தித்தோம் என்று வாய் திறக்காது ரஜினி அரசியல் பேசினோம், ஆனால் என்ன பேசினோம் என்று பகிர்ந்து கொள்ள முடியாது என்று பேட்டியளித்து இருந்தார். அப்படி என்ன ஊடகங்களிடம், பொது வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத அரசியல் என்ற கேள்விகளை அரசியல் கட்சிகள் கேட்டு வருகின்றன.

இந் நிலையில் திமுகவின் பி டீம் ஆக கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படுகின்றன. திமுக கொடுக்கும் ஆக்சிஜனை வைத்து அவர்கள் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்? தமிழ்நாடு ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்திருக்கிறார். அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்துப் பேச அவருக்கு உரிமையுள்ளது. அத்தகைய சந்திப்பை சிபிஐ (எம்) கேள்வியெழுப்பவில்லை. அதேசமயம், `நாங்கள் அரசியல் பேசினோம். ஆனால் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளமுடியாது' என ரஜினிகாந்த் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாத' அளவுக்கு பேசிய அரசியலின் மர்மம் என்ன? ஆளுநர் அரசியல்வாதியாகவும், ஆளுநர் மாளிகையை அரசியல் கட்சி அலுவலகமாகவும் மாற்றுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதையே சிபிஐ (எம்) கேள்விக்குள்ளாக்கியது.

இந்தக் கேள்விக்கு ஆளுநரோ, ஆளுநர் அலுவலகமோ பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, முந்திரிக்கொட்டையைப் போல் முந்திக்கொண்டு அண்ணாமலை பேட்டியளிக்க எந்த அவசியமுமில்லை. அண்ணாமலை ஒன்றும் ஆளுநரின் செயலாளரோ, செய்தித் தொடர்பாளரோ அல்ல;

அப்படியிருக்கும் போது வரிந்துகட்டிக் கொண்டு அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது. ஆளுநர் என்ற எல்லையைத் தாண்டி ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மேடைகளில் பிரசாரம் செய்து வருகிறார்.

தேர்தல் பத்திரங்கள் வழியாகவும், கார்ப்பரேட் கம்பெனிகளில் சுரண்டல்களில் பங்குபெற்றதன் வழியாகவும் பல்லாயிரம் கோடிகளை சுருட்டி அதைவைத்து தமிழ்நாட்டில் பா..-வுக்கு உயிரூட்ட அண்ணாமலை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் படுதோல்வியடைந்துள்ளன.

இந்நிலையில் ஆளுநர் அலுவலகத்தை தங்கள் கட்சி அலுவலகமாக மாற்றுகிற முயற்சியும் பகிரங்கமானதன் விளைவே அண்ணாமலையின் ஆதங்கத்திற்கு காரணமாகும்.

பாஜகவைப் போல மன்னிப்பு கடிதம் சுமந்த பாரம்பர்யத்தில் வந்தவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்டுகள். சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகமிழைத்த பாஜகவின் தலைவராக இருந்து கொண்டு, 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் பேசுவதற்கு விஷயமில்லாத சூழ்நிலையில், ஆளுநருக்கு வக்காலத்து வாங்கி கம்யூனிஸ்ட்டுகள்மீது அண்ணாமலை தாக்குதல் தொடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் காலத்திலும் யாருக்கும் பி டீம் ஆக இருந்ததில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தோன்றிய காலம் முதல் ஆங்கிலேயர்களுக்குபிடீம் ஆகவும், ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளின்பிடீம் ஆகவும் செயல்படுவதற்காக மட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக.

அதன் தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை. மக்கள் செல்வாக்கை பெற முடியாமல் புறக்கடை வழியாக ஆளுநர் மூலம் அரசியல் செய்ய முயற்சிக்கும் பா..-வின் எண்ணம் பகல் கனவாகவே முடியும் என தெரிவித்துள்ளார்.

Most Popular