செந்தில் பாலாஜியை நான் நம்பல…! ஸ்டாலின் ஓபன் டாக்…!
பொள்ளாச்சி: அமைச்சர் செந்தில் பாலாஜியை நான் நம்பவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திமுக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. வழக்கத்துக்கு மாறாக இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 55 ஆயிரம் பேர் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து திமுகவில் ஐக்கியமாகினர்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும், அனைத்து ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக செய்த அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டி தள்ளினார். அவர் பேசியதாவது:
அனைவரையும் சிந்தாமல், சிதறாமல் அப்படியே அள்ளி கொண்டு வந்து இங்கு சேர்த்திருக்கிறார். அவரை பாராட்டுகிறேன். அவர் ஒரு செயலில் இறங்குகிறார் என்றால் பாராட்டும்படியாக இருக்கும் என்று கூறியது உண்டு.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக செந்தில் பாலாஜி என்னிடம் பேசும் போது ஆயிரக்கணக்கானோர் உங்கள் முன்னிலையில் திமுகவில் சேர உள்ளனர். அது தொடர்பான நிகழ்ச்சிக்கு தேதி வேண்டும் என்று கேட்டிருந்தார். அப்போது அவரிடம் எவ்வளவு பேர் கட்சியில் சேருகின்றனர் என்று கேட்டேன்,
என்னிடம் 50 ஆயிரம் பேர் என்று சொன்னார். நான் நம்பாமல் அவரிடம் கேட்டேன். பின்னர் அன்றே இணைய உள்ள 50 ஆயிரம் பேர் அடங்கிய பெயர் பட்டியலை தந்துள்ளார்.
அந்த பட்டியலில் இணையும் நபர்களின் பெயர், தொலைபேசி எண், முகவரி என அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருந்தன. அதன் பிறகு என்னிடம் தேதியை பெற்றுக் கொண்டார். ஆனால் இங்கே 55 ஆயிரம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர் என்று கூறி பாராட்டினார்.