ரத்தாகிறது சமையல் கேஸ் சிலிண்டர் மானியம்…! நினைத்ததை முடிக்கும் பாஜக…!
டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேரடி மானியம் வழங்கும் திட்டத்தில் வீட்டுக்கு, மானியத்துடன் கூடிய 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. சிலிண்டர் மானியம் 2015 முதல், பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டும் வருகிறது.
2015ல் சிலிண்டர் விலை 998 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில், 563 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. மார்க்கெட் விலைப்படி சிலிண்டர் கட்டணம் வசூலிக்கப்பட்டு, பின்னர் மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
ஆனால் 2020ம் ஆண்டு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, பயனாளிகளின் வங்கி கணக்கில் எந்த மானியம் செலுத்தப்படவில்லை என்று தெரிகிறது. கடந்த பட்ஜெட்டில் பெட்ரோலிய மானியமாக மத்திய அரசு ஒதுக்கிய 40,915 கோடியை இப்போது 12,995 கோடி ரூபாயாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதேநேரம் ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச எரிவாயு இணைப்பு சேவையான உஜ்வாலா திட்டத்தில், ஏற்கெனவே உள்ள 8 கோடி பேருடன் மேலும் 1 கோடி பேர் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
2016ம் ஆண்டு மே 1ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு பெருமளவு தொகையை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் இனி ரத்தாகும் என்று கூறப்படுகிறது.