முக்கிய ‘பைல்களை’ குறி வைத்த ஓபிஎஸ்…? வேனில் அடுக்கப்பட்ட பரபர காட்சிகள்
சென்னை: அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கிய பைல்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிரடியாக கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக தொண்டனால் சகித்து கொள்ள முடியாத காட்சிகள் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் அரங்கேறி உள்ளன என்று சொல்லலாம். பொறுமையின் உருவம், அமைதியின் வடிவம் என்று அனைவராலும் ஏற்கப்பட்ட ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வர, அங்கே வரலாறு காணாத ரணகளம் நடந்திருக்கிறது.
கத்தி, கட்டைகள், கற்கள், சேர்கள் பறக்க… இதற்கு முன்பு நடக்காத காட்சிகள், சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. வானகரத்தில் பொதுக்குழு கூட்டம், கோர்ட்டில் வழக்கு என இரு முக்கிய விவகாரங்களுக்கு மத்தியில் ஓபிஎஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்.
அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் முட்டி மோதி கொண்டிருக்க ஓ பன்னீர்செல்வம் தரப்பு முக்கிய ஆவணங்களை குறி வைத்து அதை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. கட்சியின் கணக்கு வழக்குகள் பதிவேற்றப்பட்டு உள்ள கணிணியையும் பார்வையிட்டு அதில் உள்ள வேறு பல ஆவணங்களையும் அள்ளியிருப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர அங்கிருக்கும் முக்கிய கோப்புகளை தேடி, அவற்றை கைப்பற்றி வேனில் அள்ளி கொண்டு போகப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அங்கே பொதுக்குழு ஒரு பக்கம் நடக்க, இங்கே இப்படி கட்சி அலுவலகத்தில் வன்முறை காட்சிகள் என்ற சம்பவம் ஓபிஎஸ் மீது மற்றவர்கள் வைத்திருந்த பார்வையை திருப்பி போட்டியிருக்கிறது என்றே கூறப்படுகிறது.