பைனல் செமஸ்டர் எக்சாம் தேதி தெரியணுமா..? தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: பைனல் செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறி உள்ளார்.
கொரோனா காரணமாக மார்ச் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு, மற்ற தேர்வுகளில் பணம் செலுத்தி இருந்தால் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் கட் அவுட் வைத்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர். இந் நிலையில், பைனல் செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் படித்து வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் ஆகியோருக்கான இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்பட உள்ளது.
இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும். இறுதி ஆண்டு தேர்வுகள் மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்விற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், பி.ஆர்க் எனப்படும் கட்டிட அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு வருகிற 7ம் தேதி தொடங்குகிறது. இளநிலை பட்டப்படிப்பிற்கு சேர விரும்பும் மாணவர்கள் 7ம் தேதி முதல் www.tneaonline.orgஎன்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.