ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு…! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
சென்னை: கொரோனா நிவாரணம் 4000 ரூபாய் பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை வேகம் எடுத்த தருணத்தில் ஏராளமானோர் பலியாகினர். பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர். மக்களின் வாழ்வாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்தது.
இந்த தருணத்தில் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 4000ரூபாய் தரப்படும் என்று திமுக அறிவித்தது. இப்போது ஆட்சிக்கு வந்த முதல்நாளில் கொரோனா 4000 ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டு ஸ்டாலின் அசத்தினார்.
அதன்படி மே மாதம் 2000, ஜூன் மாதம் 2000 ரூபாய் என இரண்டு தவணைகளாக வழங்க அவர் உத்தரவிட்டார். மக்களுக்கு டோக்கனும் தரப்பட்டு பணமும் வழங்கப்பட்டது.
இந் நிலையில், கொரோனா நிவாரண நிதியை பெறாதவர்களுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஜூலை 31ம் தேதிக்குள் அவர்கள் நிவாரண நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.
மே 10ம் தேதி முதல் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 3 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் தரப்படும். அவர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறி உள்ளது.